திருப்பதி பிரம்மோற்சவம்.. அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி
அலங்கரிக்கப்பட்ட அனுமன் வாகனத்தில் மலையப்ப சுவாமி, கோதண்டராமர் அலங்காரத்தில் கையில் வில்லேந்தியபடி எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை மோகினி அவதார உற்சவம் (பல்லக்கு உற்சவம்) நடைபெற்றது. அப்போது மலையப்பசுவாமி, மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் அவருடன் பகவான் கிருஷ்ணர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை, நேற்று மாலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்த மலையப்ப சாமியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று காலையில் அனுமந்த வாகன சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அனுமன் வாகனத்தில் மலையப்ப சுவாமி, கோதண்டராமர் அலங்காரத்தில் கையில் வில்லேந்தியபடி எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்தார். அப்போது மாட வீதிகளில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.








