போரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு வழங்க புஜேராவில், 800 டன் நிவாரண பொருட்கள் சேகரிப்பு


போரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு வழங்க  புஜேராவில், 800 டன் நிவாரண பொருட்கள் சேகரிப்பு
x
தினத்தந்தி 26 Oct 2023 9:00 PM GMT (Updated: 27 Oct 2023 11:42 AM GMT)

போரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு வழங்க புஜேராவில், 800 டன் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது.

புஜேரா, அக்.27-

புஜேரா தன்னார்வ அமைப்பின் நிர்வாகக் குழு தலைவர் சயீத் பின் முகம்மது அல் ரக்பானி கூறியதாவது:-

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து வரும் போர் காரணமாக அப்பாவி பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் தங்களின் இருப்பிடங்களை விட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். லட்சக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

அவர்களுக்கு உதவிடும் வகையில் புஜேராவில், 'தரகும் பார் காசா' என்ற சிறப்பு திட்டத்தின் மூலம் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் 800 டன் சேகரிக்கப்பட்டுள்ளது. புஜேரா ஆட்சியாளர் மேதகு ஷேக் ஹமத் பின் முகம்மது அல் சர்கி வழிகாட்டுதலின் அடிப்படையிலும், புஜேரா பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஹமத் பின் முகம்மது அல் சர்கி மேற்பார்வையின் அடிப்படையிலும் இந்த பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் விரைவில் பாலஸ்தீனத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story