ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 600 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
காபூல்,
ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு 11:47 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் எல்லை அருகே அமைந்துள்ள அந்நாட்டின் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு 8 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது.
நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இரவு மக்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலரும் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. அடுத்தடுத்து 2 நிலநடுக்கத்தால் நகங்கர் மாகாணத்தில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் 600 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நிலநடுக்கங்களால் குனார் மாகாணத்தில் உள்ள 3 கிராமங்கள் முழுமையாக உருக்குலைந்ததாக தலிபான் அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கட்டடங்கள் இடிந்ததில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.






