கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி புள்ளி விவரம் எவ்வளவு...?

இறக்குமதி அதிகரித்தால் பொருளாதாரம் நலிவடையும்.
புதுடெல்லி,
ஒருநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஏற்றுமதி-இறக்குமதி விகிதம் கருதப்படுகிறது. ஏற்றுமதி அதிகரித்தால் பொருளாதாரம் வலுப்பெறும், இறக்குமதி அதிகரித்தால் பொருளாதாரம் நலிவடையும். இந்தநிலையில் இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்திற்கான ஏற்றுமதி-இறக்குமதி விவரம் குறித்து மத்திய அரசு நேற்று தகவல் தெரிவித்தது.
அதன்படி நாட்டின் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்துள்ளது. நாட்டின் ஏற்றுமதி மதிப்பு ரூ.3.05 லட்சம் கோடி (34.38 பில்லியன் டாலர்) ஆக பதிவானது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.8 சதவீதம் குறைவாகும். அதேசமயத்தில் இறக்குமதி ரூ.6.75 லட்சம் கோடி (76.06 பில்லியன் டாலர்) ஆனது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16.63 சதவீதம் உயர்வாகும்.
நாட்டின் வர்த்தக பற்றாக்குறை ரூ.3.70 லட்சம் கோடி (41 பில்லியன் டாலர்) ஆனது. இந்த நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபர் காலத்தில் நாட்டின் மொத்த ஏற்றுமதி ரூ.22.55 லட்சம் கோடி (254 பில்லியன்) ஆகவும் (0.63 சதவீதம் அதிகம்), மொத்த இறக்குமதி ரூ.39.98 லட்சம் கோடி (451 பில்லியன் டாலர்) ஆக பதிவானது (6.37 சதவீதம் அதிகம்).






