திறந்தநிலை, இணையவழி படிப்புகளுக்கு அங்கீகாரம் இருக்கிறதா? மாணவர்கள் உறுதிசெய்து சேர யு.ஜி.சி. அறிவுரை

அனைத்து மாணவர்களும் இத்தகைய படிப்புகளில் சேரும்முன்பு அதற்கான அங்கீகாரத்தை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
சென்னை,
நம்நாட்டில் உயர்கல்வி நிறுவனங்கள் திறந்தநிலை மற்றும் இணையவழியில் பட்டம், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை கற்றுத்தர பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.) அங்கீகாரம் பெறுவது அவசியமாகும். ஆனால் உயர்கல்வி நிறுவனங்கள் யு.ஜி.சி.யின் முறையான அங்கீகாரமின்றி படிப்புகளை வழங்கி வருகின்றன. இதனால் உயர்கல்வி, வேலைவாய்ப்புகளில் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உயர்கல்வி நிறுவனங்களில் இணையவழி, திறந்தநிலை படிப்புகளுக்கான சேர்க்கை அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி வரை நடைபெறும். இதன்வழியே படிக்க விரும்பும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் பட்டியலை https://deb.ugc.ac.in இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இதுதவிர என்ஜினீயரிங், மருத்துவம், தொழில்நுட்பம், திட்டமிடல், ஓட்டல் மேலாண்மை, உணவுத்தொழில்நுட்பம், கைவினைப் பொருட்கள் மற்றும் வடிவமைப்பு, இயன்முறை சிகிச்சை, கட்டிடக்கலை, சட்டம், வேளாண்மை, தோட்டக்கலை, மருத்துவச்சேவை சார்ந்த படிப்புகள் உள்பட பல்வேறு படிப்புகள் திறந்தநிலை மற்றும் இணையவழியில் பயிற்றுவிக்க அனுமதி கிடையாது.எனவே, அனைத்து மாணவர்களும் இத்தகைய படிப்புகளில் சேரும்முன்பு அதற்கான அங்கீகாரத்தை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த சேலம் பெரியார் பல்கலைக்கழகம், ராஜஸ்தான் சுரேஷ் கியான் விகார் பல்கலைகழகம் ஆகியவற்றில் 2024-25, 2025-26 கல்வியாண்டுகளில் இணையவழிக்கல்வி வழங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.






