ஈரோட்டில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: நாளை தொடங்குகிறது


ஈரோட்டில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: நாளை தொடங்குகிறது
x

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம் நாளை தொடங்குகிறது.

ஈரோடு

இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்கள் சேர்ப்பு முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி வரை ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி ஆகிய 11 மாவட்டங்களில் இருந்து அக்னிவீர் ஜெனரல் டூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளர் -ஸ்டோர் கீப்பர், அக்னிவீர் டிரேட்ஸ்மேன், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மேலும் மத்திய வகைகள் சிப்பாய் தொழில்நுட்ப நர்சிங் உதவியாளர், சிபாய் பார்மா, ஹவில்தார், ஜூனியர் கமிஷன் அதிகாரி ஆகிய பதவிகளுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.

தொழில்நுட்பம்

அக்னிவீர் ஜி.டி. வகைக்கு, நாளை (செவ்வாய்க்கிழமை) தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்தோருக்கும், நாளை மறுநாள் (புதன்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தோருக்கும், 28-ந்தேதி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் மதுரை மாவட்டங்களை சேர்ந்தோருக்கும், 29-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தோருக்கும் ஆட்கள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

அக்னிவீர் ஜிடி, கிளர்க் -எஸ்.கே.டி.டி. வகைக்கு வருகிற 31-ந்தேதி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தேனி மற்றும் மதுரை மாவட்டங்களை சேர்ந்தோருக்கும், அக்னிவீர் ஜி.டி., தொழில்நுட்பம் வகைக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி நாமக்கல், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தேனி மற்றும் மதுரை மாவட்டங்களை சேர்ந்தோருக்கும், அக்னிவீர் ஜி.டி., தொழில்நுட்பம் வகைக்கு வருகிற 2-ந்தேதி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி மற்றும் மதுரை மாவட்டங்களை சேர்ந்தோருக்கும் முகாம் நடக்கிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

மத்திய வகைகள் வருகிற 3 மற்றும் 4-ந்தேதிகளில் தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம். தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கும் ஆட்கள் சேர்ப்பு முகாம் நடக்கிறது. வருகிற 5-ந்தேதி மருத்துவ பரிசோதனைகள் நடைபெற உள்ளது. வருகிற 6 மற்றும் 7-ந்தேதி ஒதுக்கீட்டு நாட்கள் ஆகும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி அட்டைகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

இந்தநிலையில் முகாமுக்கான முன்னேற்பாடு பணிகள் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முகாமுக்கு வருபவர்கள் உள்ளே செல்வதற்கு வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பணிகள் நேற்று நடந்தது. மேலும் தங்கும் வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளன. முகாமுக்கு வரும் வீரர்கள் வ.உ.சி. பூங்கா நுழைவுவாயில் வழியாக உள்ளே செல்லவும், நீச்சல் குளம் அருகில் உள்ள மற்றொரு வழியில் வெளியே செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதான சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. போலீசாரும், ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

“இந்த ஆட்சேர்ப்பு முற்றிலும் வெளிப்படையானது மற்றும் திறமையை அடிப்படையாக கொண்டது என்பதால் விண்ணப்பதாரர்கள் மோசடி செய்யும் ஏஜெண்டுகளிடம் ஏமாற வேண்டாம்”, என்ற விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன.

1 More update

Next Story