ரெயில்வேயில் வேலை : 11,588 பணியிடங்களுக்கு 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம்

இந்த பணியிடங்களுக்கான தேர்வுகள் மே அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை,
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரெயில்வேயில் ஜூனியர் கிளர்க் டைப்பிஸ்ட், சரக்கு ரயில் மேலாளர், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட 11,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. ஆர்.ஆர்.பி எனப்படும் ரெயில்வே தேர்வு வாரியம் இதற்கான அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. தற்போது இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்துள்ளது. தேர்வுகள் மே அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி பணியின் தன்மைக்கேற்றபடி மாறுபடும். சீனியர் கிளர்க், ஜூனியர் கிளர்க், கமர்ஷியல், அக்கவுண்ட்ஸ் கிளர்க், ரயில் கிளர்க் ஆகிய பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டைப்பிஸ்ட் பணிக்கு தட்டச்சு திறன் அவசியம். இதேபோன்று வணிக தலைமை - டிக்கெட் சூப்பர்வைசர், சரக்கு ரயில் மேனேஜர், ஸ்டேஷன் மாஸ்டர், ஜூனியர் அக்கவுண்டண்ட் அஸ்சிஸ்டண்ட் டைபிஸ்ட் , சீனியர் கிளர்க் ஆகிய பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும்.
ரெயில்வே நடத்தும் இந்த என்.டி.பி.சி தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவும். அந்த வகையில், இந்த முறையும் தேர்வர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப அவகாசம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. தற்போது தேர்வு நடத்துவதற்கான நடைமுறைகளில் ஆர்.ஆர்.பி ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த தேர்வுக்கு 1.21 கோடிக்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்து உள்ளதாக ரெயில்வே தேர்வு வாரிய வட்டார தகவல்கள் கூறுகின்றன. இதில், 12 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட பணிகளுக்கு சுமார் 63 லட்சம் விண்ணப்பதாரர்களும், டிகிரி கல்வி தகுதி கொண்ட பண்ணியிடங்களுக்கு சுமார் 58 லட்சம் பேரும் விண்ணப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.