தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் வீடியோ எடுத்த 2 சிறுவர்கள் ரெயில் மோதி பலி

தண்டவாளத்தில் 2 பேர் நிற்பதை கண்ட என்ஜின் டிரைவர் ஹாரன் ஒலி எழுப்பினார்.
தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் வீடியோ எடுத்த 2 சிறுவர்கள் ரெயில் மோதி பலி
Published on

மராட்டிய மாநிலம் ஜல்காவ் மாவட்டம் தரங்கான் தாலுகா பத்ராட் கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஹர்ஷல் நன்னாவரே (வயது17). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் பிரசாந்த் கைர்னார்(17). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் அருகில் உள்ள பார்தி ரெயில்வே கேட் பகுதிக்கு சென்றனர். பின்னர் 2 பேரும் காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் வீடியோ எடுத்து கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த தண்டவாளத்தில் ஆமதாபாத்- ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்துகொண்டிருந்தது. இதனை கவனிக்காமல் இருவரும் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்துகொண்டு இருந்தனர். இதற்கிடையே தண்டவாளத்தில் 2 பேர் நிற்பதை கண்ட என்ஜின் டிரைவர் ஹாரன் ஒலி எழுப்பினார்.

ஆனால் காதில் ஹெட்போன் மாட்டி இருந்ததால் ஹாரன் சத்தம் அவர்களுக்கு கேட்கவில்லை. அப்போது, வேகமாக வந்த ரெயில் ஹர்ஷல் நன்னாவரே, அவரது நண்பர் பிரசாந்த் கைர்னார் மீது மோதிச்சென்றது. இதில் இருவரும் தூக்கிவீசப்பட்டு படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். தகவலறிந்து வந்த ரெயில்வே போலீசார் இருவரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் ஏற்கனவே 2 பேரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com