வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக கூறி திருப்பதியில் ரூ.4 லட்சம் மோசடி

வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக கூறி திருப்பதியில் மும்பை பக்தர்களிடம் ரூ.4 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது.
திருப்பதி,
மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்த பக்தர்கள் அமன்கோயல், கவுதம்குப்தா, ராதிகாஅகர்வால், கோபால்அகர்வால், பாலகிருஷ்ணா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தனர். இதனையொட்டி அவர்கள், திருப்பதி மாவட்டம் சந்திரகிரி பழையப்பேட்டையைச் சே்ாந்த அசோக் என்ற அசோக்ரெட்டியை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கான வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகளை வாங்கி தருமாறு கேட்டுள்ளனர்.
அந்த தரிசன டிக்கெட்டுகளுக்காக அசோக்ரெட்டிக்கு ஆன்லைன் மூலம் ரூ.4 லட்சத்து 1,750-ஐ அனுப்பி வைத்தனர். ஆனால், தரிசன டிக்கெட்டுகளை அனுப்பி வைக்காமல் அசோக்ரெட்டி திடீரென மாயமாகி விட்டார். தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மும்பை பக்தர்கள், திருமலைக்கு வந்து 2-டவுன் போலீசில் இடைத்தரகர் அசோக்ரெட்டி மீது புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக இடைத்தரகர் அசோக்ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.






