6 நாட்களில் மொத்தம் 83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து; மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம்

6 நாட்களில் 66 போயிங் 787 ரக விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து சமீபத்தில் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து உருக்குலைந்தது. விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். இதில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் (வயது 68) பலியானார்.
இந்நிலையில், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன மூத்த அதிகாரிகளுடன் மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் இன்று உயர்மட்ட கூட்டம் நடத்தியது.
பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் பயணிகள் சேவைக்கான ஒழுங்குமுறைகளை உறுதி செய்யும் நோக்கில் இந்த கூட்டம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக, ஏர் இந்தியாவின் செயல்பாடுகளை பற்றிய சமீபத்திய செயல் தரவுகளை இயக்குநரகம் மறுஆய்வு செய்தது. அவற்றில் போயிங் 787 விமானத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது என மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்து உள்ளது.
இதேபோன்று, 12 மற்றும் 17 வரையில் (6 மணி வரை) மொத்தம் 83 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அவற்றில் 66 விமானங்கள் போயிங் 787 ரக விமானங்கள் ஆகும் என்றும் தெரிவித்து உள்ளது.






