கள்ளத்தொடர்புக்கு மறுத்ததால்.. நண்பரின் மனைவியை கொன்ற வாலிபர் - வெளியான பரபரப்பு தகவல்கள்

போலீசாருக்கு பயந்து வாலிபர் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
கள்ளத்தொடர்புக்கு மறுத்ததால்.. நண்பரின் மனைவியை கொன்ற வாலிபர் - வெளியான பரபரப்பு தகவல்கள்
Published on

ஹெப்பகோடி,

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே ஹெப்பகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திருபாளையாவில் வசித்து வந்தவர் மந்திரா மண்டல் (வயது 27). இவருக்கும், பிஜோன் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து, 6 வயதில் ஒரு மகன் உள்ளான். குடும்ப பிரச்சினையால் பிஜோன், மந்திரா ஆகியோர் பிரிந்து வாழ்ந்தனர். இந்த தம்பதியின் சொந்த ஊர் மேற்கு வங்காளம் ஆகும்.

பிஜோனின் நண்பர் சுமன் மண்டல் (29). இவரும், திருபாளையாவில் தான் வசித்தார். பிஜோன், சுமன் அந்தமானுக்கு வேலைக்கு சென்றிருந்தனர். சமீபத்தில் சுமன் மட்டும் பெங்களூருவுக்கு திரும்பி வந்திருந்தார். இந்த நிலையில், கடந்த 5-ந்தேதி இரவு மந்திரா வீட்டுக்கு சென்ற சுமன், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் வீட்டின் மற்றொரு அறையில் சுமனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

இதுகுறித்து ஹெப்பகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளது. கணவரை பிரிந்து வாழ்ந்த மந்திரா, அவரது நண்பரான சுமனிடம் பேசி பழகி வந்துள்ளார். ஆனால் கடந்த 5-ந் தேதி இரவு மந்திரா வீட்டிற்குள் சென்ற சுமன் தன்னுடன் கள்ளத்தொடர்பு வைத்து கொள்ளும்படி வற்புறுத்தி இருக்கலாம் என்றும், இதற்கு மந்திரா சம்மதம் தெரிவிக்காததால் அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பின்னர் போலீசுக்கு பயந்து சுமன் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். 2 பேருக்கும் கள்ளத்தொடர்பு இல்லை என்று ஹெப்பகோடி போலீசார் தெரிவித்துள்ளனர். அதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com