டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் ஆப்கானிஸ்தான் மந்திரி; பெண் நிருபர்களுக்கு அழைப்பு


டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் ஆப்கானிஸ்தான் மந்திரி; பெண் நிருபர்களுக்கு அழைப்பு
x
தினத்தந்தி 12 Oct 2025 1:32 PM IST (Updated: 12 Oct 2025 5:33 PM IST)
t-max-icont-min-icon

ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்துள்ளார்.

டெல்லி,

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனையடுத்து, அந்நாட்டின் தலைநகர் காபுலில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகத்தை இந்தியா மூடியது. அதேவேளை, அந்நாட்டிற்கு பல்வேறு மனிதாபிமான உதவிகளை இந்தியா செய்து வருகிறது.

இதனிடையே, ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் வெளியுறவுத்துறை மந்திரி அமீர்கான் முத்தாகி அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் 16ம் தேதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். அமீர்கான் முத்தாகி கடந்த வெள்ளிக்கிழமை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார். அதன்பின்னர், அமீர்கான் முத்தாகி அன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அமீர்கான் முத்தாகியின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்தியாவின் பல்வேறு செய்தி நிறுவனங்களின் நிருபர்கள் பங்கேற்றனர். ஆனால், இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு பெண் நிருபர் கூட பங்கேற்கவில்லை. பெண் நிருபர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக பல்வேறு அடக்குமுறைகளை தலிபான்கள் பின்பற்றி வரும் நிலையில் அதேபோன்ற நடவடிக்கையை இந்தியாவில் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி மேற்கொண்டுள்ளதாக சமூகவலைதளத்திலும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதேவேளை, ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியின் செய்தியாளர்கள் சந்திப்பு ஆப்கானிஸ்தான் தூதரகம் மூலம் நடத்தப்பட்டதாகவும், இதில் அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்தது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அமீர்கான் முத்தாகி இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார். இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பெண் நிருபர்களும் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story