புட்டபர்த்தி சத்திய சாய் பாபா மகாசமாதியில் பிரதமர் மோடி வழிபாடு

சாய்பாபாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தும் பாக்கியம் இன்று எனக்கு கிடைத்தது என்று பிரதமர் மோடி கூறினார்.
புட்டபர்த்தி சத்திய சாய் பாபா மகாசமாதியில் பிரதமர் மோடி வழிபாடு
Published on

புட்டபர்த்தி,

சத்திய சாய் பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று புட்டபர்த்திக்கு வருகை தந்தார். தொடர்ந்து, சத்ய சாய் பாபாவின் மகா சமாதிக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு வழிபாடு மேற்கொண்டார். அங்கிருந்த அர்ச்சகர்கள் மற்றும் வேத விற்பன்னர்கள் வேத கோஷங்கள் முழங்க பிரதமர் மோடியை ஆசீர்வதித்தனர்.

இதையடுத்து நடைபெற்ற ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில், சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனை மற்றும் அவரது சிறப்பை கவுரவிக்கும் வகையில் நினைவு நாணயத்தையும், அஞ்சல் தலையையும் பிரதமர் மோடி வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், ஆந்திரப் பிரதேச முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல் மந்திரி பவன் கல்யாண், மத்திய மந்திரிகள் ராம் மோகன் நாயுடு, கிஷண் ரெட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் இந்த பிறந்தநாள் நூற்றாண்டு விழா வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, தெய்வீக ஆசீர்வாதம் ஆகும். சத்ய சாய்பாபா இப்பொழுது நம்முடன் இல்லை என்றாலும், அவரது போதனைகள் மற்றும் அன்பு, சேவை மனப்பான்மை ஆகியவை உலகெங்கும் கோடிக்கணக்கானவர்களை வழிநடத்துகிறது. சத்ய சாய்பாபா மனித வாழ்க்கையில் சேவை என்பதை இதயத்தில் கொண்டு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். புட்டபர்த்தியின் புனித பூமியில் இருப்பது ஒரு சிறந்த ஆன்மிக அனுபவம். சாய்பாபாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தும் பாக்கியம் இன்று எனக்கு கிடைத்தது.சத்ய சாய்பாவின் நூற்றாண்டு விழா என்பது உலகளாவிய அன்பு, அமைதி மற்றும் சேவைக்கான திருவிழாவாக மாறி உள்ளது என்றார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com