சபரிமலை தரிசனத்துக்கு பாரம்பரிய காட்டு வழி பயணம் வேண்டாம் - அய்யப்ப பக்தர்களுக்கு அறிவுறுத்தல்

பாரம்பரிய வனப்பகுதிகளில் யானை, சிறுத்தை உட்பட வன மிருகங்களின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
சபரிமலை,
கேரள ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், சபரிமலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று சன்னிதானத்தில் கூடுதல் கலெக்டர் அருண் தலைமையில், உயர் அதிகாரிகளின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் அவர் கூறியதாவது:-
சபரிமலையில், தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு, உடனடி தரிசன முன்பதிவு தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்து வருகிறார்கள். கூட்ட தெரிசலை தவிர்க்க பக்தர்கள் முன்பதிவு செய்த நாளிலேயே தரிசனத்தை முடித்து கொள்ள வேண்டும்,
சபரிமலை தரிசனத்துக்கு வரும், பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், வயதானவர்கள் பாரம்பரிய காட்டு வழி பயணத்தை தவிர்த்த வேண்டும். அவர்கள் அனைவரும் நிலக்கல்- பம்பை வழியாக, சபரிமலைக்கு வருவது சிறந்தது, யானை, சிறுத்தை உட்பட வன மிருகங்களின் நடமாட்டம் இந்த வனப்பகுதிகளில் அதிக அளவில் இருக்கும் என்பதால், பாதுகாப்பு கருதி இந்த எச்சரிக்கை விடப்படுகிறது. இந்த வழிகளில் வனத்துறை, தீயணைப்பு மீட்பு படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள போதிலும் எச்சரிக்கை தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.






