மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் குளறுபடி: மே.வங்க விளையாட்டுத்துறை மந்திரி ராஜினாமா

நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதால் பதவியில் இருந்து விலகியதாக மேற்கு வங்க விளையாட்டுத்துறை மந்திரி கூறியுள்ளார்.
கொல்கத்தா,
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி, 3 நாள் சுற்றுப்பயணமாக 13-ஆம் தேதி இந்தியா வந்தார். கொல்கத்தா சென்ற அவர், தனது 70 அடி உயர சிலையைத் திறந்து வைத்தார். பின்னர், அங்குள்ள சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்களைக் காண்பதற்கான பிரமாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ஆனால் ரசிகர்கள் முண்டியடித்ததால், 22 நிமிடங்களிலேயே அங்கிருந்து மெஸ்சி புறப்பட்டார். இதனால் நீண்ட தூரத்திலிருந்து வந்ததாலும், ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் டிக்கெட்டுகள் வாங்கியிருந்ததாலும் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இருக்கைகளை உடைத்தனர்; தடுப்பு வேலிகளைத் தூக்கி எறிந்தனர். இந்த அசம்பாவிதம் தொடர்பாக விசாரணை நடத்த, கொல்கத்தா ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆஷிம் குமார் ரே தலைமையிலான விசாரணைக் குழுவை அமைத்தது. இதனிடையே, முதன்மை நிகழ்ச்சி அமைப்பாளர் சதத்ரு தத்தாவை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, மேற்கு வங்காள விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முதல் அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தனது கைப்பட ராஜினாமா கடிதத்தை எழுதி அனுப்பினார். இந்த ராஜினாமாவை மம்தா பானர்ஜியும் ஏற்றுக்கொண்டார். மெஸ்சி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு அரூப் பிஸ்வாவே பொறுப்பெனவும், முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை என்றும் பலரும் குற்றம் சாட்டிய நிலையில், நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகவே பதவியில் இருந்து விலகியதாக அவர் கூறியுள்ளார்.






