பீகார் தேர்தல்: நல்லாட்சி, சமூக நீதி வென்றுள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்

தேர்தல் வெற்றி, மக்களுக்கு சேவை செய்வதற்கு எங்களுக்கு புதிய பலத்தை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பீகார் தேர்தல்: நல்லாட்சி, சமூக நீதி வென்றுள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்
Published on

பாட்னா,

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பம் முதலே தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. பெரும்பான்மைக்கு அதிகான இடங்களை கைப்பற்றி பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது என்பதை உறுதி செய்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 200-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் பெரும் சரிவை சந்தித்துள்ளது.

இந்த நிலையில், பீகார் தேர்தல் வெற்றி தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"நல்லாட்சி வென்றுள்ளது. வளர்ச்சி வென்றுள்ளது. மக்கள் ஆதரவு மனநிலை வென்றுள்ளது. சமூக நீதி வென்றுள்ளது. 2025 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க மற்றும் இணையற்ற வெற்றியை அளித்ததற்காக பீகாரின் ஒவ்வொருவருக்கும் நன்றி. இந்த வெற்றி, பீகார் மக்களுக்கு சேவை செய்வதற்கும் பீகாருக்காக உழைப்பதற்கும் எங்களுக்குப் புதிய பலத்தை அளிக்கிறது.

வரும் காலங்களில், பீகாரின் முன்னேற்றம், பீகாரின் உள்கட்டமைப்பு மற்றும் பீகாரின் கலாச்சாரத்திற்காக நாங்கள் இன்னும் அதிகமாகச் செய்வோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநிலத்திற்கு முழுமையான வளர்ச்சியை வழங்கியுள்ளது. எங்கள் சாதனைப் பதிவு மற்றும் மாநிலத்தை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்வதற்கான எங்கள் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர். இந்த இணையற்ற வெற்றிக்கு முதல் மந்திரி நிதீஷ் குமார், மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை சேர்ந்த எங்கள் கூட்டாளிகளான சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி மற்றும் உபேந்திர குஷ்வாஹா ஆகியோரை வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com