‘நக்சல்களை முழுமையாக ஒழிக்கும்வரை பா.ஜ.க. அரசு ஓயாது’ - அமித்ஷா

இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற பா.ஜ.க. அரசு உறுதிபூண்டுள்ளது என அமித்ஷா தெரிவித்தார்.
புதுடெல்லி,
சத்தீஸ்கர் மாநிலம் கர்ரேகுட்டா மலையில் சி.ஆர்.பி.எப். வீரர்கள், சத்தீஷ்கார் காவல்துறை, மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் கோப்ரா படையினர் இணைந்து நடத்திய 'ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்' நடவடிக்கைக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில் அவர் பேசியதாவது;-
“பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம், இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற உறுதிபூண்டுள்ளது. நக்சல்கள் அனைவரும் சரணடையும் வரை, அல்லது பிடிக்கப்படும் வரை அல்லது ஒழிக்கப்படும் வரை பா.ஜ.க. அரசு ‘ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்’ நடவடிக்கையின்போது வீரர்கள் வெளிப்படுத்திய துணிச்சலும், வீரமும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் வரலாற்றில் ஒரு பொன் அத்தியாயமாக நினைவுகூரப்படும்.
அச்சுறுத்தல் இருந்தபோதிலும் பாதுகாப்புப் படையினர் மிகுந்த மனஉறுதியுடன் நடவடிக்கையை மேற்கொண்டு ஒரு பெரிய நக்சல் முகாமை வெற்றிகரமாக அழித்தார்கள். கர்ரேகுட்டா மலையில் இருந்த நக்சல்களின் சேமிப்பு கிடங்கு மற்றும் விநியோக சங்கிலி பாதுகாப்பு படை வீரர்களால் அழிக்கப்பட்டது.
நாட்டின் வளர்ச்சி குன்றிய சில பகுதிகளில் நக்சல்கள் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை சீர்குலைத்துள்ளனர். நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பசுபதிநாத் முதல் திருப்பதி வரையிலான பகுதியில் 6.5 கோடி மக்களின் வாழ்க்கையில் ஒரு புதிய சூரிய உதயம் ஏற்பட்டுள்ளது.
நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது பலத்த காயமடைந்த பாதுகாப்பு பணியாளர்களை ஆதரிக்கவும், அவர்களின் வாழ்க்கை எளிதாக்கப்படுவதை உறுதி செய்யவும் மோடி அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 2026 மார்ச் 31-ந்தேதிக்குள் நாட்டிலிருந்து நக்சல் பயங்கரவாதத்தை ஒழிக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






