தங்கையிடம் பழகிய வாலிபரை குத்திக்கொன்ற அண்ணன் - 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு

கொலைக்கு உடந்தையாக இருந்த மற்றொரு சகோதரர் மற்றும் அவர்களின் தாய்க்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தங்கையிடம் பழகிய வாலிபரை குத்திக்கொன்ற அண்ணன் - 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு
Published on

மும்பை,

மும்பையை சேர்ந்தவர் இம்தியாஸ். இவருக்கும் அண்டாப்ஹில் பகுதியை சேர்ந்த பாத்திமா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் பேசி பழகி வந்தனர். இதுபற்றி அறிந்த பாத்திமாவின் அண்ணன் சாந்த் சேக், இம்தியாசிடம் தனது சகோதரியிடம் பேசுவதை நிறுத்துமாறும், இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளார்.

இந்தநிலையில் அதே ஆண்டில் இம்தியாஸ் மீண்டும் பாத்திமாவை சந்தித்து பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாந்த் சேக், தனது மற்றொரு சகோதரர் சதாம் மற்றும் தாய் சபீரா ஆகியோருடன் சேர்ந்து இம்தியாசை பிடித்து கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது, சாந்த் சேக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இம்தியாசை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த இம்தியாஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சாந்த் சேக், தாய் சபீரா, சதாம் ஆகிய 3 பேரையும் கைது செய்து, மும்பை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவில் 3 பேர் மீதான குற்றம் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபணமானது. இதனை தொடர்ந்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சாந்த் சேக்கிற்கு 10 ஆண்டுகள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த கொலையில் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரர் சதாம் மற்றும் அவர்களின் தாய் சபீரா ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com