சிபிஐ விசாரணை நிறைவு: நாளை சென்னை திரும்புகிறார் விஜய்?


தினத்தந்தி 12 Jan 2026 7:01 PM IST (Updated: 12 Jan 2026 7:52 PM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகைக்கு பின் மீண்டும் விஜயிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி,

தவெக தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். இந்தநிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த மாதம் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். அங்கு சிபிஐ அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் விளக்கம் அளித்தனர். இந்தநிலையில், கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பினார்கள். அதில் 12-ம் தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதனையடுத்து தவெக தலைவர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார். இதற்காக விஜய் இன்று காலை 6.20 மணியளவில் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்திற்கு சென்றார். காலை 7.10 மணியளவில் அவர் சென்னை விமானம் நிலையம் வந்தார். சென்னை பழைய விமான நிலையத்தில் 6 எண் நுழைவு வாயிலில் வந்து இறங்கிய விஜய்யை மத்திய விமான பாதுகாப்பு படையினர் விமானம் நிறுத்தப்பட்டு இருந்த இடம் வரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். அவர் விமானத்தின் காரில் ஏறி தனி விமானம் நிற்கும் பகுதிக்கு சென்றார்.

விஜய்க்கு ஏற்கனவே ஒய் பிரிவு பாதுகாப்பு இருக்கும் நிலையில் விமான நிலையத்திலும் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.பின்னர் தனி விமானம் மூலம் விஜய் காலை 7.40 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் தனி விமானத்தில் தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணைபொதுச்செயலாளர் நிர்மல் குமார், இணை பொருளாளர் ஜெகதீஷ் பழனிசாமி, உதவியாளர் ராஜேந்திரன், விஷ்ணு ரெட்டி, பாதுகாப்பு அதிகாரி நயீம் ஆகியோரும் உடன் சென்றனர்.

விஜய் தங்குவதற்காக டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஓட்டலில் அறை முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து சிபிஐ அலுவலகம் செல்லும் வழியில் இந்த ஓட்டல் அமைந்துள்ளது. சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆவதற்கு வசதியாக இந்த ஓட்டலில் அறை முன்பதிவு செய்யப்பட்டது.

டெல்லிக்கு தனி விமானத்தில் சென்ற விஜய், பின்னர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு ஐடிசி மவுரியா ஓட்டலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தயாராகி மீண்டும் காரில் புறப்பட்டார். அங்கிருந்து சுமார் அரை மணி நேரம் காரில் பயணம் செய்து அவர் சிபிஐ அலுவலகம் வந்தடைந்தார். அதன்பிறகு காலை 11.30 மணியளவில் அவர் சிபிஐ அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். உடனடியாக விஜய்யிடம் விசாரணை தொடங்கியது. அப்போது அவரிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

* கரூரில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது யார்? உங்களுக்கு அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டதா?

* நிகழ்ச்சிக்கு செல்ல பல மணி நேர தாமதம் ஏன்?

* கூட்டம் அதிகரித்தபோது கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்தீர்களா?

* கூட்ட நெரிசல் பற்றி எப்போது அறிந்தீர்கள்? இதுகுறித்து நிர்வாகிகள் முன்கூட்டியே தெரிவிக்கவில்லையா?

* தண்ணீர், பாதுகாப்பான நுழைவு, வெளியேறும் வழி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டதா?’’

என விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் 1.30 மணி நேரமாக கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

அந்த கேள்விகளுக்கு ஒவ்வொன்றுக்கும் விஜய் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.

கரூர் சம்பவம் தொடர்பாக இதுவரை பலரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி விளக்கம் பெற்றுள்ள நிலையில் அதன அடிப்படையிலும் பல கேள்விகளை விஜய்யிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான தவெக தலைவர் விஜய்யிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. சுமார் 7 மணி நேர விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார் விஜய்.முன்னதாக டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணை முடிந்தும் ஒன்றரை மணி நேரமாக தனியறையில் உட்கார வைக்கப்பட்டிருந்தார். விசாரணை விவரம் பதிவு செய்யப்பட்ட பேப்பரில் கையெழுத்திடுவதற்காக அவர் அமரவைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

இந்தநிலையில்,: தவெக தலைவர் விஜய்யிடம் நாளை நடைபெறுவதாக இருந்த சிபிஐ விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. விஜய்யின் கோரிக்கையை ஏற்று விசாரணையை சிபிஐ ஒத்திவைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று இரவு டெல்லியில் தங்கும் விஜய். நாளை சென்னை திரும்புவார் என தவெகவினர் தரப்பில் கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு பின் மீண்டும் விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story