கலப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி 4 மாதங்களில் தற்கொலை

கடந்த சில நாட்களாக இருவரும் நிதி நெருக்கடியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
ஐதராபாத்,
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹசிம் கான்(29) என்பவரும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவன் குமாவத்(21) என்ற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இருவரும் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள லட்சுமி நகர் காலனி பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இதனிடையே, இந்த தம்பதியினர் கடந்த சில நாட்களாக நிதி நெருக்கடியால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இருவரும் தங்கள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






