தீபாவளி பண்டிகை: ஜனாதிபதி உள்பட தலைவர்கள் வாழ்த்து

மகிழ்ச்சியின் தீபங்களால் இந்தியா ஒளிரட்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்திலும் தீபாவளி களை கட்டியுள்ளது. மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடுகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள இந்தியர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் செழுமை வளர்ச்சி, நல்ல ஆரோக்கியம் கிடைக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள். மகிழ்ச்சியின் தீபங்களால் இந்தியா ஒளிரட்டும், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அன்பின் ஒளி ஒவ்வொரு வீட்டிலும் பரவட்டும்” என்று தெரிவித்துள்ளார்.






