

பெங்களூரு,
பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிக்க தடை விதித்து கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாலும், சுகாதார சீர்கேடு அச்சுறுத்தல் காரணமாகவும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் பராமரிக்கப்படும் இடங்களில் மட்டுமே புறாக்களுக்கு உணவளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுவும் புறாக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் வகையில், உணவளிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது தொற்று நோய்களை பரப்பும் வகையில் செயல்படுதல் என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கர்நாடக அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.