புதையல் கிடைக்கும் ஆசையில்... குழந்தையை தத்தெடுத்து நரபலி கொடுக்க முயன்ற கொடூர தம்பதி

பவுர்ணமி நாளான நேற்று இரவு, குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு மாவட்டத்தின் ஹோஸ்கோட் நகரில் சுலிபெள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சையது இம்ரான். சில மாதங்களுக்கு முன் புலம்பெயர் தொழிலாளியிடம் இருந்து ஆண் குழந்தையை இம்ரானும், அவருடைய மனைவியும் தத்தெடுத்தனர்.
எனினும், சட்டப்படி அது மேற்கொள்ளப்படவில்லை. போலியான பிறப்பு சான்றிதழுடன், குழந்தையின் உண்மையான தந்தையுடன் ஒப்பந்தம் ஒன்றும் போட்டு கொண்டனர்.
இந்நிலையில், பவுர்ணமி நாளான நேற்று இரவு, குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், இம்ரானின் வீட்டில் ஒரு வயது குழந்தையை நரபலி கொடுக்க திட்டமிட்டு உள்ளனர் என மர்ம நபர் பேசியுள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என கூறி தொடர்பை துண்டித்து விட்டார்.
உடனடியாக மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவு, குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் பிரிவின் அதிகாரிகள் இம்ரானின் வீட்டை அலசி, தேடி கண்டறிந்தனர். அந்த வீட்டின் ஒரு அறையில், சிறிய குழி ஒன்று தோண்டப்பட்டு இருந்தது. சடங்கு செய்வதற்காக ஊதுபத்தி, மலர்கள் மற்றும் பிற பொருட்கள் இருந்தன. குழந்தையை மீட்டு, பாதுகாப்பாக கொண்டு சென்றனர். புதையல் கிடைக்கும் ஆசையில் அவர்கள் குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற கொடூரம் தெரிய வந்தது.
இதுபற்றி குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நல குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சுலிபெள்ளி கிராம பகுதியை சேர்ந்த மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






