கர்நாடகா: சாதிவாரி கணக்கெடுப்பில் விபரங்களை அளிக்க நாராயண மூர்த்தி-சுதா தம்பதி மறுப்பு

கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பின்போது விபரங்களை அளிக்க நாராயண மூர்த்தி-சுதா தம்பதி மறுப்பு தெரிவித்தனர்.
கர்நாடகா: சாதிவாரி கணக்கெடுப்பில் விபரங்களை அளிக்க நாராயண மூர்த்தி-சுதா தம்பதி மறுப்பு
Published on

பெங்களூரு,

பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதாமூர்த்தி எம்.பி.யின் வீட்டிற்கு மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணிக்காக ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் நேற்று சென்றனர். அப்போது சுதாமூர்த்தி, அவரது கணவர் நாராயணமூர்த்தி அங்கு இருந்தனர். ஆனால் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தங்களது குடும்பத்தை பற்றிய தகவல்களையும், தங்களது சாதி மற்றும் பிற விவரங்களையும் கொடுக்க சுதாமூர்த்தி தம்பதி மறுத்துவிட்டனர்.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பால் எந்த பயனும் இல்லை என்று கூறி, அவர்கள் புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் நாங்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்ல என மட்டும் சுதா மூர்த்தி கடிதம் எழுதி கொடுத்துள்ளார். இதனால் சுதாமூர்த்தி வீட்டில் இருந்து ஆசிரியர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

இதுகுறித்து அம்மாநில மந்திரி சந்தோஷ் கூறுகையில், அவரது உரிமையை மதிக்கிறோம். மத்திய அரசு கணக்கெடுப்பு எடுக்கும் போதும் இதையே அவர் செய்வார் என நம்புகிறோம் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com