சத்தீஷ்காரில் 20 மாதங்களில் 2,200-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் சரண்

பாதுகாப்பு படையினரின் கடுமையான நடவடிக்கையால், நக்சலைட்டுகள் பலர் ஆயுதங்களை விடுத்து பொதுவாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
ஜெகதல்பூர்,
சத்தீஷ்காரில் அடர்ந்த காடுகளில் நக்சலைட்டுகள் அதிக அளவில் பதுங்கி கொண்டு பயிற்சி மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது வழக்கம். கிராமவாசிகள், அரசியல் தலைவர்களை இலக்காக கொண்டு அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
எனினும் சமீப காலங்களாக அவர்களில் பலர் போலீசில் சரண் அடைந்து வருகின்றனர். பிஜாப்பூர், சுக்மா, நாராயண்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் அவர்கள் காணப்படுகின்றனர். இந்நிலையில், சத்தீஷ்காரின் ஜெகதல்பூர் நகரில் பஸ்தார் சரக ஐ.ஜி. பி. சுந்தர்ராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, சத்தீஷ்காரில் இடதுசாரி பயங்கரவாதம் அதன் இறுதி நிலையில் உள்ளது.
பாதுகாப்பு படையினரின் கடுமையான நடவடிக்கையால், நக்சலைட்டுகள் பலர் ஆயுதங்களை விடுத்து பொதுவாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். மீதமுள்ள நக்சலைட்டுகளை நாங்கள் தொடர்ந்து தேடி வருகிறோம். அவர்கள் ஒன்று சரணடைய வேண்டும். அல்லது மற்ற நக்சலைட்டுகள் எதிர்கொள்ளும் முடிவை அவர்களும் எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
கடந்த 20 மாதங்களில் 2,200-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் சரண் அடைந்துள்ளனர். அவர்களுக்கு திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி அளிக்கப்படும். இதனால், அவர்கள் பொதுவாழ்க்கைக்கு திரும்ப வழியேற்படும் என்றார்.






