மணமகளுக்கு பதிலாக அமர்ந்திருந்த பெண்ணின் தாய் - மணமேடையில் மாப்பிள்ளை அதிர்ச்சி

திருமணம் செய்யாவிட்டால் போலீசில் பாலியல் புகார் கொடுப்போம் என்று மணமகனை மிரட்டியுள்ளனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மீரட் பிரம்மபுரி பகுதியை சேர்ந்தவர் முகமது ஆசிம் (வயது 22). இவருக்கும், ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை முகமது ஆசிமின் அண்ணனும், அண்ணியும் செய்து வந்தனர்.
இதற்கிடையே திருமணத்தன்று பெண்ணின் பெயரை மாற்றி கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த முகமது ஆசிம், பெண் தலையில் அணிந்திருந்த முக்காடை விலக்கி பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார் அதாவது மணமேடையில் அமர்ந்திருந்தவர் மணமகள் அல்ல. மணமகளின் விதவை தாயார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிம், உடனடியாக திருமணத்தை நிறுத்தினார். ஆனால் அவரது அண்ணனும், அண்ணியும், 'திருமணம் செய்யாவிட்டால் போலீசில் பாலியல் புகார் கொடுப்போம்' என்று ஆசிமை மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து முகமது ஆசிம் இந்த மோசடி குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், மணமகனின் அண்ணன் விதவை பெண்ணை தனது தம்பிக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி ரூ.5 லட்சத்தை மணமகள் வீட்டாரிடம் வாங்கியது தெரியவந்தது. இருதரப்பினரையும அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.






