பிரதமர் மோடிக்கு சசிதரூர் புகழாரம்

பிரதமர் மோடி பங்கேற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் சசிதரூர் பங்கேற்றார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசிதரூர், சமீபகாலமாக பா.ஜனதா தலைவர்களை புகழ்ந்து பேசி வருகிறார். அதற்கு காங்கிரசில் எதிர்ப்பு எழுந்தபோதிலும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. இந்நிலையில், நேற்று அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
”ஒரு ஆங்கில பத்திரிகை அழைப்பின்பேரில், பிரதமர் மோடி பங்கேற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அவர் வளர்ச்சிக்கான நாட்டின் பொறுமையின்மை பற்றி பேசினார். இந்தியா வெறும் வளர்ந்து வரும் சந்தையாக மட்டுமல்ல, உலகத்துக்கே வளர்ந்து வரும் மாதிரியாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். தான் எப்போதும் தேர்தல் மனநிலையில் இருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள், ஆனால் தான் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் உண்மையிலேயே உணர்ச்சிகரமான மனநிலையில் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். இந்தியாவின் பாரம்பரியம், மொழிகள், அறிவுத்திறன் ஆகியவற்றை மீட்டெடுக்க 10 ஆண்டுகள் தேசிய திட்டத்துக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். மொத்தத்தில் அவரது உரை, பொருளாதார கண்ணோட்டமாகவும், நடவடிக்கைக்கான கலாசார அழைப்பாகவும் இருந்தது. மோசமான சளி, இருமலால் நான் அவதிப்பட்டபோதிலும் அதில் பங்கேற்றதில் மகிழ்ச்சி.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






