வெளிநாடு செல்ல அனுமதி கோரிய மனுவை திரும்ப பெற்றார், நடிகை ஷில்பா ஷெட்டி

எதிர்காலத்தில் வெளிநாடு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால் அனுமதி கேட்டு புதிய மனுவை தாக்கல் செய்வதாக ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.
மும்பை,
இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.60 மோசடியில் ஈடுபட்டதாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் அடங்கிய அமர்வு ரூ.60 கோடி டெபாசிட் செய்தால் வெளிநாடு செல்ல அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக கூறியது.
இந்தநிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் வெளிநாடு செல்ல அனுமதி கேட்ட மனுவை வாபஸ் பெற விரும்புவதாக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். தங்களின் வெளிநாடு பயணம் தொடர்பான திட்டம் இன்னும் இறுதி செய்யப்படாததால் மனுவை திரும்பப்பெற முடிவு செய்து இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.
எதிர்காலத்தில் வெளிநாடு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால் அனுமதி கேட்டு புதிய மனுவை தாக்கல் செய்வதாகவும் கூறினர். இதையடுத்து நீதிபதிகள் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு தாக்கல் செய்த மனுவை திரும்பப்பெற அனுமதி வழங்கினர்.






