நடத்தையில் சந்தேகம்: பெண்ணை கொன்று கள்ளக்காதலன் தூக்குப்போட்டு தற்கொலை


நடத்தையில் சந்தேகம்: பெண்ணை கொன்று கள்ளக்காதலன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 3 Dec 2025 8:55 AM IST (Updated: 3 Dec 2025 12:48 PM IST)
t-max-icont-min-icon

போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜகோபால்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணா (வயது 51). தனியார் நிறுவன ஊழியரான இவர், மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவருக்கும் அங்குள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த லலிதா (49) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. லலிதாவும் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.

அவர்கள் 2 பேருக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் திருமணம் செய்யாமல் கடந்த 10 ஆண்டுகளாக கணவன்-மனைவி போல இந்திரா பிரியதர்ஷினி நகரில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் லலிதாவின் நடத்தையில் லட்சுமி நாராயணாவுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால், அவர்கள் 2 பேர் இடையேயும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினமும் இந்த விவகாரத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த லட்சுமி நாராயணா, வீட்டில் இருந்த சேலையால் லலிதாவின் கழுத்தை இறுக்கி உள்ளார்.

இதில் லலிதா மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி நாராயணா, அதே சேலையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று காலை வீடு திறந்து கிடந்ததால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது லலிதா தரையிலும், லட்சுமி நாராயணா தூக்கில் தொங்கிய நிலையிலும் சடலமாக கிடந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி ராஜகோபால்நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராஜகோபால்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story