காதல்ஜோடிக்கு ஆதரவாக பேசிய இருவர் குத்திக்கொலை.. போலீசார் முன்னிலையில் நடந்த கொடூரம்


காதல்ஜோடிக்கு ஆதரவாக பேசிய இருவர் குத்திக்கொலை.. போலீசார் முன்னிலையில் நடந்த கொடூரம்
x
தினத்தந்தி 14 Dec 2025 11:16 AM IST (Updated: 14 Dec 2025 1:25 PM IST)
t-max-icont-min-icon

காதல்ஜோடிக்கு ஆதரவாக பேசிய 2 பேர் போலீசார் முன்னிலையிலேயே கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டனர்.

சிவமொக்கா,

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி புதிய டவுன் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜெய்பீம் நகரில் வசிப்பவர் நந்தீஸ் (வயது 25). இதேப்பகுதியை சேர்ந்தவர் சிருஷ்டி (22). இவர்கள் 2 பேரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இதையடுத்து இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு பேசி வந்துள்ளனர். இவர்களின் காதலை 2 பேரின் குடும்பத்தினரும் எதிர்த்துள்ளனர். இதனால், காதல் ஜோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறினர். இதுகுறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர், காதல் ஜோடியை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் மாலை காதல் ஜோடி பத்ராவதி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த 2 பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர். அவர்களை போலீஸ் நிலைய வளாகத்தில் வைத்து போலீசாா் விசாரித்தனர். அப்போது, 2 பேரின் குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதில், சிருஷ்டியின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் கோபமடைந்தனர். அப்போது அவர்கள், திடீரென நந்தீசுக்கு ஆதரவாக பேசிய அவரது உறவினர்கள் கிரண் (25) மற்றும் மஞ்சுநாத் (65) ஆகிய 2 பேரையும் கத்தியால் சரமாரியாக குத்தினர். இதனை பார்த்த போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். ஆனாலும் அவர்களால் தடுக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். பின்னர், போலீசார் சிருஷ்டியின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 5 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story