தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய மந்திரி பியூஷ் கோயல் நியமனம்

கோப்புப்படம்
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாஜக தேர்தல் பொறுப்பாளர், இணை பொறுப்பாளர்களை ஜேபி நட்டா அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் பாஜகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாஜக தேர்தல் பொறுப்பாளர், இணை பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார். அதன்படி தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தேர்தல் இணைப் பொறுப்பாளர்களாக மத்திய மந்திரிகள் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் முரளிதர் மோஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலையொட்டி 3 மத்திய மந்திரிகளை பாஜக களமிறக்கியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.






