உத்தரகாண்ட்: மேகவெடிப்பு 3-வது நாளாக ஹெலிகாப்டர் வழியே தொடரும் மீட்பு பணி

உத்தரகாண்டில் மத்லி ஹெலிபேடுக்கு கொண்டு வரப்படும் மக்களுக்கு மருத்துவ சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
உத்தரகாண்ட்: மேகவெடிப்பு 3-வது நாளாக ஹெலிகாப்டர் வழியே தொடரும் மீட்பு பணி
Published on

உத்தரகாசி,

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் ஹர்சிலுக்கு அருகிலுள்ள தாராலி பகுதியில் கடந்த 5-ந்தேதி திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், வீடுகள், கட்டிடங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து, உள்ளூர் காவல்துறை, எஸ்.டி.ஆர்.எப், ராணுவம் மற்றும் தீயணைப்பு படைகளின் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேகவெடிப்பால் ஒரு கிராமமே மூழ்கிய சம்பவத்தில் 5 பேர் பலியானார்கள்.

உத்தரகாண்டில் மேகவெடிப்பு மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு முதல்-மந்திரி தமி, நேரில் சென்று பார்வையிட்டார். இதேபோன்று, பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதுவரை 650 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். 50 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் நிவாரண மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று ஹெலிகாப்டர் உதவியுடனும் மீட்பு பணி நடைபெறுகிறது.

இந்நிலையில், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள மத்லி ஹெலிபேட்டில் இருந்து தராலி மற்றும் ஹர்சில் பகுதிகளில் பேரிடரால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு 3-வது நாளாக ஹெலிகாப்டர்கள் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. வெள்ளத்திற்கு நடுவே சிக்கியவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்று மத்லி ஹெலிபேடுக்கு கொண்டு வரப்படும் மக்களுக்கு மருத்துவ சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com