பதிவு தபால் சேவை நிறுத்தம் ஏன்? தபால்துறை விளக்கம்


பதிவு தபால் சேவை நிறுத்தம் ஏன்? தபால்துறை விளக்கம்
x

பதிவு தபாலை ஸ்பீட் போஸ்ட் முறையோடு இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் அதனை டிராக் செய்து கொள்ள முடியும்.

புதுடெல்லி,

பதிவு தபால் முறை ரத்து தொடர்பாக இந்திய தபால் துறை அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் கடிதங்கள் எழுதுவது, தபால் அனுப்புவது உள்ளிட்டவை எல்லாம் படிப்படியாக மறைந்து விட்டன. இருந்தபோதும் ஆவணங்கள் உள்ளிட்டவை இன்னமும் பதிவு தபால்கள் மூலம் தான் அனுப்பப்பட்டு வருகின்றன. ரிஜிஸ்டர்டு போஸ்ட் எனப்படும் பதிவு தபால்கள் தான் ஆவணங்களை அனுப்ப நம்பகத்தன்மை வாய்ந்தது என்ற நம்பிக்கை இன்றளவும் மக்கள் மத்தியில் நீடிக்கிறது.

இந்த நிலையில் தான் பதிவு தபால் சேவை செப்டம்பர் 1-ம்தேதி முதல் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியானது. இதற்கு இந்திய தபால் துறை விளக்கம் அளித்துள்ளது. இதன்படி பதிவு தபால் சேவை முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது என்ற செய்தி தவறானது. பதிவு தபால் சேவையை இன்னும் மேம்படுத்துவதற்காக அதனை ஸ்பீடு போஸ்ட் எனப்படும் விரைவு தபால் தேவையுடன் இணைக்கிறோம் என தெரிவித்திருக்கிறது.

தபால் துறை உள்கட்டமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது என விளக்கம் தரப்பட்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக தான் பதிவு தபாலையும் விரைவு தபாலையும் ஒன்றிணைத்திருக்கிறோம் எனக் கூறியிருக்கிறது. விரைவு தபாலுடன் பதிவு தபாலை ஒருங்கிணைப்பதன் மூலம் பதிவு தபாலின் நம்பகத்தன்மையை காக்கும் அதே வேளையில் விரைவு தபாலில் கிடைக்கும் வேகமான டெலிவரி, ஆன்லைன் டிராக்கிங் வசதிகள் பதிவு தபாலுக்கும் கிடைக்கும் என விளக்கம் தரப்பட்டுள்ளது.

பதிவு தபாலை ஸ்பீட் போஸ்ட் முறையோடு இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் அதனை டிராக் செய்து கொள்ள முடியும், ரியல் டைம் டெலிவரி அப்டேட்டுகளை பார்த்துக்கொள்ள முடியும், ஓடிபி அடிப்படையிலான பாதுகாப்பான டெலிவரி சேவையை பெற முடியும். தபால் துறை, பதிவு தபால் நீக்கப்படவில்லை மேம்படுத்தப்பட்டுள்ளது. அஞ்சல் அட்டை, தபால் பெட்டி போன்றவை வழக்கம் போல உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story