கணவனை கொன்று உடலை சூட்கேசில் அடைத்த பெண் - அதிர்ச்சி சம்பவம்

கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் ஜாஸ்பூர் மாவட்டம் கொர்பா கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 43) . இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர். பிள்ளைகள் 3 பேருக்கும் திருமணமாகி வேறு கிராமங்களில் வசித்து வருகின்றனர்.
இதனிடையே, சந்தோசுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக அவ்வப்போது வாக்குவாதம் , சண்டை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தோசுக்கும், லதாவுக்கும் இடையே மீதும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டில் இருந்த கத்தியால் சந்தோசை லதா குத்திக்கொன்றார். பின்னர், அவரது உடலை சூட்கேசில் அடைத்துள்ளார். பின்னர், மூத்த மகளை செல்போனில் தொடர்புகொண்ட லதா தனது கணவர் சந்தோசை கொலை செய்துவிட்டதாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மூத்த மகள் உடனடியாக கொர்பா கிராமத்திற்கு சென்றுள்ளார். மேலும், இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சந்தோசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவனை கொன்றுவிட்டு தலைமறைவான லதாவை தீவிரமாக தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.






