ரூ.12½ கோடி கோவில் நிலம் மோசடி வழக்கில்

புதுவையில் ரூ.12½ கோடி கோவில் நிலம் மோசடி வழக்கில் பத்திர எழுத்தர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி
புதுச்சேரி பாரதி வீதி காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 64,035 சதுர அடி நிலம் ரெயில்போ நகரில் உள்ளது. ரூ.12½ கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை சிலர் போலியான ஆவணங்கள் தயாரித்து வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்ததாக கோவில் அறங்காவல் குழு நிர்வாகி சுப்ரமணியன் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த பிப்ரவரி மாதம் சென்னையை சேர்ந்த ரத்தினவேல் உள்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் உயில் தயாரித்து விற்பனை செய்ததாக முத்தியால்பேட்டையை சேர்ந்த பெரிய நாயகி சாமி (71), அவரது மகன் ஆரோக்கியதாஸ் (49) உள்பட 4 பேரை நேற்று கைது செய்தனர்.
இந்த வழக்கில் போலியாக உயில் தயாரிக்க உதவியதாக முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரை சேர்ந்த சகாயராஜ் (62), ஜீவானந்தபுரம் மாரியம்மன் கோவில் தெரு கருணாகரன் என்கிற செந்தில் (37), தேங்காய்திட்டு பத்திர எழுத்தர் மணிகண்டன் (46), முத்தியால்பேட்டை சூரியகாந்தி நகர் அசோக் (52) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் இன்று காலை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதில் கருணாகரன் மீது ஒரு கொலை வழக்கு உள்ளது.