நகைக்கடையில் 15 பவுன் தங்கம், வெள்ளி பொருட்களை திருடிய பலே தம்பதி

புதுவை நகை கடையில் 15 பவுன் நகை, வெள்ளி பொருட்களை திருடிய தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி
புதுவை நகை கடையில் 15 பவுன் நகை, வெள்ளி பொருட்களை திருடிய தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்கள்.
நகை கடை
புதுச்சேரி லூயிபிரகாசம் வீதியை சேர்ந்தவர் தேவநாதன் (வயது49). இவர் பாரதி வீதியில் நகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கவுண்டம் பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் மனைவி திவ்யா கடந்த ஒரு வருடமாக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் திவ்யாவின் நடவடிக்கையில் தேவநாதனுக்கு சந்தேகம் எழுந்தது. அதையடுத்து அவர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டபோது தங்க, வெள்ளி நகைகளை திருடியது தெரியவந்தது.
15 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு
இதுகுறித்து தேவநாதன் விக்னேஷ், திவ்யாவிடம் விசாரித்தார். அப்போது அவர்கள் கடையில் இருந்து 120 கிராம் (15 பவுன்) தங்க நகைகளையும், 700 கிராம் வெள்ளி பொருட்களையும் திருடி விற்றதை ஒப்புக்கொண்டனர். மேலும் திருடிய நகைகளை 10 நாட்களுக்கு திரும்ப தந்து விடுவதாக அவகாசம் கேட்டனர். கடை உரிமையாளரும் அவகாசம் அளித்தார். ஆனால், அவர்கள் சொன்னபடி திருடிய நகைகளை திரும்ப ஒப்படைக்கவில்லை. மாறாக நகையுடன் தம்பதி இருவரும் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.
தம்பதி மீது வழக்கு
இதுதொடர்பாக பெரியகடை போலீசில் தேவநாதன் புகார் அளித்தார்.
அதன்பேரில் பெரியகடை போலீசார் விசாரணை நடத்தி விக்னேஷ், திவ்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகிறார்கள்.






