கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது


கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
x

கோட்டக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோட்டக்குப்பம்

கோட்டக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை

புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார் கோட்டக்குப்பம் ஜமீத் நகரில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.

அப்போது வீட்டில் இருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் கொண்டுசென்று விசாரித்தனர்.

விசாரணையில் புதுவை ஆட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த அருள் (வயது 22) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 9 கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வாலிபர்கள் கைது

இந்த கஞ்சா யாரிடம் இருந்து வாங்கப்பட்டது என்று போலீசார் விசாரித்தபோது, சோலைநகர் அருண் (22), லாஸ்பேட்டை அஜித்குமார் (24) ஆகியோர் தனக்கு கஞ்சா சப்ளை செய்ததாக அருள் தெரிவித்தார்.

அதன்பேரில் அருண், அஜித்குமார் ஆகிய 2 பேரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சென்னை தாம்பரத்தை சேர்ந்த கேசவன் என்பவரின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பினால், அவர் மூலம் ஒருவர் புதுவை புதிய பஸ் நிலையத்துக்கு வந்து கஞ்சாவை கொடுத்துவிட்டு சென்றுவிடுவார். அந்த கஞ்சாவை சிறிய பொட்டலங்களாக மாற்றி கோட்டக்குப்பம் பகுதியில் விற்பனை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story