அரவிந்தர் ஆசிரமத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தியானம்


அரவிந்தர் ஆசிரமத்தில்  ஜனாதிபதி திரவுபதி முர்மு தியானம்
x

புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தியானம் செய்தார். முன்னதாக கடற்கரையில் அவர் நடைபயிற்சி மேற்கொண்டார்.

புதுச்சேரி

புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தியானம் செய்தார். முன்னதாக கடற்கரையில் அவர் நடைபயிற்சி மேற்கொண்டார்.

கடற்கரை சாலையில் நடைபயிற்சி

புதுவைக்கு 2 நாள் அரசு முறை பயணமாக வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் நேற்று இரவு தங்கினார். 2-வது நாளான இன்று காலை நடைபயிற்சி செல்ல திட்டமிட்டிருந்தார்.

ஜனாதிபதி வருகையையொட்டி, கடற்கரை சாலையில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள காலை 4 மணி முதல் 7 மணி வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. திட்டமிட்டப்படி, ஜனாதிபதி காலை 5.25 மணிக்கே அவர் தங்கியிருந்த நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் இருந்து காந்தி சிலை உள்ள கடற்கரைசாலை நோக்கி சென்றார். பின்னர் அங்கு சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது நகராட்சி துப்புரவு பணியாளர்கள், வருவாய்துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் கடற்கரை பகுதியில் இருந்தனர். ஜனாதிபதியோடு அவர்களும் நடந்து சென்றனர். அவர் பழைய கலங்கரை விளக்கம் அருகே சென்று திரும்பினார்.

காந்தி சிலை

காந்தி சிலை முன்பு வந்த போது, அங்கு சிறிது நேரம் நின்று சிலையை பார்த்தார். அப்போது அங்கு இருந்த அதிகாரிகள் சிலையின் வரலாறு குறித்து தெரிவித்தனர். பின்னர் அங்கு இருந்த பழைய கலங்கரை விளக்கம், தியாகிகள் சுவர், தேசிய கொடிக்கம்பம் ஆகியவற்றை பார்வையிட்டார். அப்போது அதிகாரிகள் சிலர் அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கிருந்து மீண்டும் நடைபயிற்சி தொடங்கினார். சுமார் 40 நிமிடம் நடைபயிற்சி மேற்கொண்ட அவர் காலை 6.05 மணிக்கு நீதிபதிகள் விருந்தினர் மாளிகைக்கு திரும்பினார்.

நடைபயிற்சியின் போது கடற்கரை சாலை மற்றும் அதனை ஒட்டியுள்ள சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடற்படை கப்பல்கள் கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தன.

அரவிந்தர் ஆசிரமம்

காலை 11.25 மணிக்கு நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒயிட் டவுண் பகுதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்றார். அவருடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோரும் சென்றனர்.

அங்கு மகான் அரவிந்தர், அன்னையின் சமாதியில் திரவுபதி முர்மு, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு அமர்ந்து சுமார் 10 நிமிடம் தியானம் செய்தார். தொடர்ந்து அன்னை, அரவிந்தர் ஆகியோர் பயன்படுத்திய அறைகளை பார்வையிட்டார். அப்போது அரவிந்தர், அன்னையின் வரலாற்றை ஆசிரம நிர்வாகிகள் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எடுத்துக்கூறினர். பின்னர் மதியம் 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ஆரோவில் சென்றார்.


Next Story