பெரிய மார்க்கெட் பூமிபூஜை திடீர் ரத்து


பெரிய மார்க்கெட் பூமிபூஜை திடீர் ரத்து
x

வியாபாரிகள் எதிர்ப்பு காரணமாக பெரிய மார்க்கெட் மேம்பாட்டு பணிக்கான பூமிபூஜை திடீரென ரத்து செய்யப்பட்டது.

புதுச்சேரி

வியாபாரிகள் எதிர்ப்பு காரணமாக பெரிய மார்க்கெட் மேம்பாட்டு பணிக்கான பூமிபூஜை திடீரென ரத்து செய்யப்பட்டது.

பெரிய மார்க்கெட் மேம்பாட்டு பணி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதுவை பெரிய மார்க்கெட்டை முழுவதுமாக இடித்துவிட்டு புதிதாக கடைகள் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த திட்டத்துக்கு மார்க்கெட் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பெரிய மார்க்கெட் கடைகளை பகுதி பகுதியாக இடித்து புதிதாக கட்டித்தர வேண்டும். இடிக்கப்படும் கடை வியாபாரிகளுக்கு பழைய சிறைச்சாலை வளாகத்தில் தற்காலிக கடைகள் அமைத்துதர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால் அரசு ஒட்டுமொத்தமாக இடித்துவிட்டு புதிய கடைகள் கட்டுவதில் உறுதியாக உள்ளது. வியாபாரிகளுக்கு ரோடியர் மில் வளாகம், பழைய சிறைச்சாலை வளாகத்தில் தற்காலிக கடைகள் அமைத்து தரப்படும் என்று அரசு உறுதி அளித்துள்ளது. ஆனால் அதை ஏற்க மறுத்து வியாபாரிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பூமிபூஜை திடீர் ரத்து

இந்தநிலையில் பெரிய மார்க்கெட்டை புதிதாக கட்டுவதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் இன்று பூமிபூஜை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வந்தனர்.

இதை அறிந்த வியாபாரிகள் அவசர கூட்டம் நடத்தி, பூமிபூஜை நடத்தினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்தனர். இதனால் பரபரப்பு உருவானது. இந்தநிலையில் பூமிபூஜை நடத்துவதை அதிகாரிகள் திடீரென்று ரத்து செய்துள்ளனர். இந்த தகவல் இரவோடு இரவாக வியாபாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இன்று பேச்சுவார்த்தை

இந்த விவகாரம் தொடர்பாக நாளை (செவ்வாய்க்கிழமை) புதுவை சட்டமன்ற வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதி அளித்துள்ளனர்.

எனவே நாளை நடக்கும் பேச்சுவார்த்தையின்போது பெரிய மார்க்கெட் கட்டுமான விவகாரத்தில் உறுதியான முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.


Next Story