100 அடி ரோட்டில் நாளை மறுநாள் முதல் வாகன போக்குவரத்து மாற்றம்


100 அடி ரோட்டில் நாளை மறுநாள் முதல் வாகன போக்குவரத்து மாற்றம்
x

தரைப்பாலம் அமைக்கும் பணிக்காக 100 அடி சாலையில் நாளை மறுநாள் இரவு முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

புதுச்சேரி

தரைப்பாலம் அமைக்கும் பணிக்காக 100 அடி சாலையில் நாளை மறுநாள் இரவு முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

தரைப்பாலம் பழுது

புதுவை மரப்பாலம் சந்திப்பு பகுதியில் வேல்ராம்பட்டு ஏரியில் இருந்து வரும் கால்வாய் (கழிவுநீர் கால்வாய்) பாலம் பழுதடைந்துள்ளதால் சற்று பெரிய அளவிலான தரைப்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை 2 கட்டமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அண்ணாநகர், எல்லைப்பிள்ளைசாவடி பகுதிகளில் அமைக்கப்பட்டதுபோல் பிரிகாஸ்ட் முறையில் (வேறொரு இடத்தில் கான்கிரீட் பாலங்களுக்கான கட்டமைப்பினை செய்து கொண்டு வந்து பொருத்துதல்) பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக கான்கிரீட் கட்டுமானங்கள் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளன.

போக்குவரத்து மாற்றம்

இந்த செயற்கை பால பகுதிகளை தோண்டி புதைக்கும் பணிகள் 2 கட்டமாக நடைபெற உள்ளன. இதன் காரணமாக மரப்பாலம் 100 அடி ரோட்டில் போக்குவரத்து மாற்றியமைக்கப்படுகிறது. இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை அரசு பொதுப்பணித்துறையினரால் முதலியார்பேட்டை மரப்பாலம் சந்திப்பில் 100 அடி சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் சாலையின் குறுக்கே கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு முதல் வருகிற 27-ந்தேதி வரை மேற்படி சாலையில் வாகன போக்குவரத்து மாற்றியமைக்கப்படுகிறது.

புவன்கரே வீதி

இந்த காலகட்டத்தில் இந்திராகாந்தி சிக்னலில் இருந்து மரப்பாலம் நோக்கி வரும் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது. விழுப்புரம் மார்க்கத்தில் இருந்து, ராஜீவ்காந்தி சதுக்கத்தில் வரும் கனரக வாகனங்கள் புவன்கரே வீதி வழியாக மரப்பாலம் வந்து கடலூர் நோக்கி செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

அதேநேரத்தில் கடலூரில் இருந்து வரும் கனரக வாகனங்கள் புவன்கரே வீதியில் செல்ல தடை செய்யப்படுகிறது. மேலும் இந்த காலகட்டத்தில் திண்டிவனம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து ராஜீவ்காந்தி சிக்னல், இந்திராகாந்தி சிக்னல் மார்க்கமாக கடலூர் நோக்கி வரும் லாரி, டிரக்குகள் அனைத்தும் கோரிமேடு போக்குவரத்து நகரம், மேட்டுப்பாளையம் ரோடு வழியாக அரும்பார்த்தபுரம் மேம்பாலம் சென்று கடலூர் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story