கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி

புதுச்சேரி, காரைக்காலில் இன்று கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி சென்றனர். தொடர்ந்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.
புதுச்சேரி
புதுச்சேரி, காரைக்காலில் இன்று கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி சென்றனர். தொடர்ந்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.
தவக்காலம்
ஏசு சிலுவையில் பாடுபட்டு மரித்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இந்த காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் உபவாசம் இருப்பது வழக்கம். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி சாம்பல் புதனுடன் தவக்காலம் தொடங்கியது.
ஏசு சிலுவையில் அறையப்படுவதை புனித வெள்ளி என்றும், 3-ம் நாள் உயிர்த்தெழுந்த தினம் (உயிர்ப்பு பண்டிகை) ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. ஏசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, ஜெருசலேம் நகரின் வீதிகள் வழியாக அவரை கோவேறு கழுதையின் மேல் அமரவைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
அப்போது வழிநெடுகிலும் இருந்த மக்கள் குருந்தோலைகளை கையில் ஏந்தி தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, ஓசன்னா என்று கீதம் பாடினர். இதனை நினைவு படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை பவனி கடைப்பிடிக்கப்படுகிறது.
குருத்தோலை பவனி
அதன்படி, இன்று குருத்தோலை ஞாயிறு என்பதால் புதுவையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் குருத்தோலை பவனி நடந்தது. புதுச்சேரி ரெயில் நிலையம் எதிரே உள்ள இருதய ஆண்டவர் தேவாலயம், ரெட்டியார்பாளையம் புனித ஆந்திரேயா ஆலயம், மிஷன் வீதி ஜென்மராக்கினி தேவாலயம்,நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், சட்டசபை அருகே உள்ள தூய யோவான் ஆலயம், வில்லியனூர் லூர்து மாதா தேவாலயம், உப்பளம் சவேரியார் ஆலயம் உள்பட புதுவையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் குருத்தோலை பவனி நடந்தது.
இதில் கிறிஸ்தவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு குருத்தோலையை கையில் ஏந்தி ஓசன்னா பாடல் பாடியபடி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
காரைக்கால்
காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள நூற்றாண்டுகள் பழமையான புனித தேற்றரவு அன்னை ஆலயம், கோட்டுச்சேரி தூய சகாய அன்னை ஆலயம் மற்றும் காரைக்காலில் உள்ள ஏராளமான கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் குருத்தோலை பவனி நடந்தது.
வருகிற 5-ந் தேதி கட்டளை வியாழனும், 6-ந் தேதி பெரிய வெள்ளியும் கடைப்பிடிக்கப்பட உள்ளது. 9-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.






