தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Jun 2023 4:51 PM GMT (Updated: 16 Jun 2023 8:27 AM GMT)

அரியாங்குப்பம் பகுதியில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் பகுதியில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர் மின்வெட்டு

அரியாங்குப்பம் பகுதியில் மின்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து அரியாங்குப்பம் கிழக்கு மற்றும் மேற்கு பஞ்சாயத்து, நகரப் பகுதி, வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம், காக்காயந்தோப்பு, ராதாகிருஷ்ணன் நகர், மணவெளி, ஓடைவெளி, டோல்கேட் மற்றும் நோணாங்குப்பம் வரை மின்வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக எந்தவித முன்னறிவிப்பு இன்றி அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில் இரவு நேரத்தில் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர்.

சாலை மறியல்

நேற்று நள்ளிரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அரியாங்குப்பம் கோட்டைமேடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அரியாங்குப்பம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.

இதே நிலை நீடித்தால் புதுச்சேரி-கடலூர் சாலையில் பாய் விரித்து படுத்து போராட்டமும், மின்துறை அலுவலகத்திற்கு மலர் வளையம் வைக்கும் போராட்டமும் நடத்தப்படும் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story