அரசு அலுவலகங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு

காரைக்காலில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பணிக்கு உரிய நேரத்தில் வருகிறார்களா? என்று கலெக்டர் திடீரென ஆய்வு செய்தார்.
காரைக்கால்
காரைக்கால் மாவட்ட கலெக்டராக குலோத்துங்கன் கடந்த சில நாட்களுக்கு முன் பதவியேற்றுகொண்டார். பதவி ஏற்பின்போது, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத்துறை அலுவலகத்திலும், அதிகாரிகள், ஊழியர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, சரியான நேரத்தில் ஊழியர்கள் பணிக்கு வருகிறார்களா? என ஆய்வு செய்வதற்காக இன்று காலை 9 மணிக்கு கலெக்டர் குலோத்துங்கன், காரைக்கால் மதகடி பகுதியில் காமராஜர் அரசு வளாகத்தில் அமைந்துள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அனைத்து அலுவலகங்களிலும் வருகை பதிவேட்டை பார்வையிட்ட கலெக்டர், குறித்த நேரத்தில் அனைவரும் பணிக்கு வர வேண்டும். வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், பொதுமக்களின் குறைகளை கேட்டு காலத்தோடு அதனை தீர்த்து வைக்கவேண்டும். பொதுமக்களை காத்திருக்க வைக்க கூடாது. கோப்புகளை காலத்தோடு சரி செய்யவேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.