இலவச மனைப்பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகம் முற்றுகை


இலவச மனைப்பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x

இலவச மனைப்பட்டா கேட்டு புதுவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர

புதுச்சேரி

இலவச மனைப்பட்டா

புதுவை கலிதீர்த்தாள்குப்பத்தில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த சுமார் 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க கோரி அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுவை சட்டசபையை அவர்கள் முற்றுகையிட்டு, முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். அப்போது அதிகாரிகளை அழைத்து பேசிய முதல்-அமைச்சர் ரங்கசாமி, நரிக்குறவ மக்களுக்கு மனைப்பட்டா வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இந்த நிலையில் நரிக்குறவர்கள் குடும்பத்துடன் இன்று மதியம் 3.30 மணியளவில் புதுவை கலெக்டர் அலுவலகத்தை திடீரென்று முற்றுகையிட்டனர். முதல்-அமைச்சர் அறிவித்தபடி தங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள் நரிக்குறவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி மனைப்பட்டா வழங்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருவதாகவும் விரைவில் மனைப்பட்டா வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story