திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்


திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x

சனிக்கிழமையில் வந்த மகாளய அமாவாசையை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருநள்ளாறு

சனிக்கிழமையில் வந்த மகாளய அமாவாசையை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அதிகாலையில் நடைதிறப்பு

காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு உலகப் புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் தரிசனம் அளித்து வருகிறார்.

இங்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். புரட்டாசி 4-வது கடைசி சனிக்கிழமையான இன்று மகாளய அமாவாசையும் சேர்ந்து வந்ததால் சனி பகவானை பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக அதிகாலை 4.30 மணிக்கே நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

அதன்படி புதுச்சேரி, சென்னை, கடலூர், காஞ்சீபுரம், சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

கடந்த காலங்களில் சிறப்பு தரிசனங்கள் அமைக்கப்பட்ட நிலையில் கோவில் நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பேரில் திருப்பதி போல திருநள்ளாறிலும் பொது தரிசனமாக மாற்றியமைக்கப்பட்டது.

இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அர்ச்சனைகள் நடைபெற்றது.

சனீஸ்வர பகவானின் தீர்த்தகுளமான நளன் தீர்த்தத்தில் அதிகாலை முதல் பக்தர்கள் புனித நீராடி, சனிபகவானுக்கே உரித்தான எள் தீபம் ஏற்றி தங்களது தோஷங்கள் நீங்க வேண்டுதலை நிறைவேற்றினர்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் திருநள்ளாறு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் மற்றும் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சனிப்பெயர்ச்சி

வரும் டிசம்பர் மாதம் 20-ந்தேதி மாலை 5 மணி 20 நிமிடத்தில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.


Next Story