குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் பணி


குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் பணி
x

காரைக்கால் காமராஜர் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியை பொதுப்பணித்துறையினர் தொடங்கினர்.

கோட்டுச்சேரி

காரைக்கால் காமராஜர் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியை பொதுப்பணித்துறையினர் தொடங்கினர்.

ரெயில் பாதை அகலப்படுத்தும் பணி

காரைக்காலில் இருந்து திருவாரூர் மாவட்டம் பேரளம் வரையிலான அகல ரெயில் பாதைத்திட்டம் நடைபெற்று வருகிறது. ரெயில் பாதையைக் கடந்து செல்லும் சாலைகளில் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

காரைக்கால் மாவட்டத்தில் காமராஜர் சாலையில் மட்டும், பொதுப்பணித்துறையின் மேம்படுத்தப்பட்ட குடிநீர் திட்ட பிரதான குழாய்கள் செல்கின்றன. இப்பகுதியில் காரைக்கால் ரெயில் நிலையத்திலிருந்து கோவில்பத்து ரெயில் நிலையம் வழியாக செல்லும் முக்கிய அகல ரெயில் பாதைப் பணிகள் நடந்து வருகின்றன.

பள்ளம் தோண்டும் பணி

இப்பகுதியில்தான் பிரதான குடிநீர் குழாய் காமராஜர் சாலையையொட்டி ராஜாத்தி நகரில் உள்ள பிரமாண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு குடிநீர் குழாய் செல்கிறது. இந்தக் குழாயை ரெயில் பாதை அமைத்தபின் பராமரிப்பதும், பழுது நீக்குவதும், புதுப்பிப்பதும் கடினம் என்பதால், இந்த இடத்தில் குடிநீர் குழாய்கள் செல்ல பாதாள வழியை அமைக்க பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி இன்று தொடங்கியது.

இங்கு பூமியில் 600 மில்லிமீட்டர் தடிமனுள்ள 2 இரும்புக்குழாய்கள் அமைக்கப்பட்டு, அதற்குள் பாதுகாப்பாக 450 மில்லி மீட்டர் மற்றும், 350 மில்லி மீட்டர் தடிமனுள்ள கேஸ்டிக் குழாய்கள் பொருத்தப்படும். எவ்வளவு எடையையும் தாங்கும் வலிமை கொண்ட இந்தக் குழாய்களில் கசிவோ, தெரிப்போ ஏற்படாது.

மாற்றுப்பாதை

குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் பணிக்காரணமாக நாகை-சென்னை மார்க்கத்தில் புதிய பஸ் நிலையத்துக்கு காமராஜர் சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் அனுப்பப்பட்டன.


Next Story