அரசு ஆஸ்பத்திரிக்குள் சுற்றித்திரியும் நாய்கள்


காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்குள் சுற்றித்திரியும் நாய்களால் நோயாளிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

காரைக்கால்

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்குள் சுற்றித்திரியும் நாய்களால் நோயாளிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

அரசு ஆஸ்பத்திரி

காரைக்கால் நகரின் மையப் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரிக்கு காரைக்கால் மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாநிலமான தமிழகத்தில் இருந்து தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வர வருகின்றனர்.

ஆனால் இந்த ஆஸ்பத்திரியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. சாதாரண காய்ச்சல், விபத்து என சென்றால் கூட அண்டை மாநிலங்களுக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்யும் அவல நிலை உள்ளது. அரசு ஆஸ்பத்திரி மெயின் கேட்டில் பாதுகாப்பு ஊழியர்கள் இல்லாத அவல நிலை நீடித்து வருகிறது.

நோயாளிகள் அச்சம்

இந்தநிலையில் நகரின் பல இடங்களில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக ஆஸ்பத்திரிக்குள் சுற்றித்திரிகின்றன. சிகிச்சைக்கு வந்ததுபோல் அவை பிரசவ ஆஸ்பத்திரி பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிகின்றன. இது நோயாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோதாத குறைக்கு எலி, பூனைகள் தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே ஆஸ்பத்திரியில் சர்வ சாதாரணமாக நடமாடும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரியில் நாய்கள் சுற்றித்திரியும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


Next Story