ஆன்லைனில் முதலீடு செய்ய வேண்டாம்


ஆன்லைனில் முதலீடு செய்ய வேண்டாம்
x

புதுச்சேரியில் ஆன்லைன் மூலமாக தினமும் 10-க்கும் மேற்பட்டோர் பணத்தை இழந்து வருகிறார்கள் எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் ஆன்லைன் மூலமாக தினமும் 10-க்கும் மேற்பட்டோர் பணத்தை இழந்து வருகிறார்கள் எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

ரூ.3½ லட்சம் ஆன்லைன் மோசடி

வில்லியனூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சங்கர். இவரிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக வருமானம் தருகிறோம் என இணைய வழி மோசடிக்காரர்கள் தெரிவித்தனர். இதனை உண்மை என நினைத்து சங்கர் ரூ.90 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். ஆனால் அவருக்கு, கூறியபடி பணம் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சங்கர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இதேபோல் புதுவை குருசுக்குப்பம் முகுந்தன் என்பவர் ஆன்லைனில் ரூ.2 லட்சத்து 61 ஆயிரமும், அரியாங்குப்பத்தை சேர்ந்த ஒரு வாலிபரிடம் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 834-மும் அதிக வருமானம் தருவதாக எண்ணி ஆன்லைனில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்துள்ளனர். இதுகுறித்து அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எச்சரிக்கை

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக வருமானங்கள் கிடைக்கும் என ஆசைவார்த்தையை நம்பி யாரும் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம். குறிப்பாக இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வரும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம். இதனை நம்பி புதுச்சேரியில் மட்டும் தினமும் 10-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலமாக முதலீடு செய்து பணத்தை இழந்து வருகின்றனர். சிம்கார்டில் 5ஜி சேவையை வழங்குவதாக வரும் ரகசிய எண்ணை யாரும் கேட்டால் பகிர வேண்டாம். இதன் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படும் எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story