மின்கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும்


மின்கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும்
x

3 மாதங்களுக்கு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும் என மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கூறினார்.

புதுச்சேரி

புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, இந்தியா கூட்டணியில் யார் வேண்டுமானாலும் பிரதமராக வரலாம் என ராகுல்காந்திக்கு எதிரான ஒரு கருத்தை கூறி இருக்கிறார். பலமுறை அவர் டெல்லி சென்று சோனியா, ராகுல்காந்தியை சந்திக்க முடியாததால் அதை தெரிவித்திருக்கிறார். அதை காங்கிரசார் உணர்ந்தால் நல்லது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் அமையும் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்கும். புதுச்சேரி மாநிலத்தில் மின்சார கொள்முதல் விலை உயர்வை ஈடு செய்ய மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஒரு முடிவினை அரசு அறிவித்துள்ளது. அதாவது ரூ.38 கோடியை 3 மாதங்கள் வசூலிக்க திட்டமிட்டுள்ளனர். இதனை அரசே மானியமாக வழங்கலாம். தற்போது உயர்த்தப்பட்டுள்ள கட்டணத்தின் படி ரூ.60 கோடி வருமானம் கிடைக்கும். எனவே, உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசு திரும்ப பெறவேண்டும்.கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில இணை செயலாளர் கணேசன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணைச் செயலாளர் நாகமணி, ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story