விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம்


விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம்
x

இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்கக்கோரி விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம் நடத்தினார்கள்.

புதுச்சேரி

இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்கக்கோரி விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம் நடத்தினார்கள்.

இலவச மின்சாரம்

விவசாயிகளின் விளை பொருட்களை அரசு கொள்முதல் செய்யவேண்டும், விளைநிலங்களில் மின்சார மீட்டர் பொருத்தும் பணியை நிறுத்த வேண்டும், இலவச மின்சாரம் தொடர வேண்டும், விவசாய கடன் தள்ளுபடிக்கான அரசாணையை வெளியிட வேண்டும், காரைக்காலுக்கு 7 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுவை கிளை வலியுறுத்தி வருகின்றது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி புதுவை விவசாயிகள் இன்று டிராக்டர் ஊர்வலம் நடத்தினார்கள். புதுவை ரோடியர் மில் மைதானத்தில் இருந்து இந்த ஊர்வலம் தொடங்கியது. டிராக்டரின் முன்பக்கம் கரும்பு, வாழை மற்றும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் கட்டப்பட்டு இருந்தது.

விவசாயிகள் மனு

ஊர்வலத்துக்கு சங்க தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் கலந்துகொண்டு ஊர்வலத்தை தொடங்கிவைத்தார். செயலாளர் சங்கர் உள்பட விவசாயிகள் பலரும் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். ஊர்வலம் மறைமலையடிகள் சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை வழியாக கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. ஊர்வலத்தில் 20-க்கும் மேற்பட்ட டிராக்டரிகளில் விவசாயிகள் வந்தனர். அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி துணை கலெக்டர் வினயராஜை சந்தித்து மனு அளித்தனர்.


Next Story